வேலணை பிரதேச சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழா நிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களின் தலைமையில் 28.05.2025 அன்று யா/வேலணை மத்திய கல்லூரி சேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் இ.குருபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் க.கம்சநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர். நிகழ்வில் நடனப் போட்டிகள் நடைபெற்றதுடன், பிரதேச சபை பணியாளர்களுக்கான மெச்சுரை சான்றிதழ்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். அத்துடன் பிரதேச சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் நாளை வெள்ளிக்கிழமையுடன் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் அவருக்கான கௌரவிப்பையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சபையின் செயலாளர் தனது உரையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மக்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி விழாவை ஒழுங்கு செய்ததாகக் குறிப்பிட்டார். மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும்.
சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும்.
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார்.
ஆளுநர் உரையாற்றுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்கு உருவாக்கப்பட்ட மன்றங்கள் மக்களின் தேவைகளை அறிந்து தேடிச்சென்று சேவை செய்யவேண்டும். அந்த மன்றங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டால், மக்கள் பங்களிப்புடன் பல்வேறு விடயங்களை அவர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
நாளை ஓய்வுபெறும் சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரனை 1993ஆம் ஆண்டிலிருந்து தெரியும். நான் தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் உதவி அரசாங்க அதிபராக இருந்தபோது அவர் பிரதேச சபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் பணியாற்றியவர். மற்றவர்களை மதிக்கின்ற சிறந்த பண்பாளன். இந்தப் பிரதேசத்துக்கு அவர் சிறப்பான பணியாற்றியுள்ளார். அவரது ஓய்வுகாலம் சிறக்கவேண்டுகின்றேன் என்பதுடன் எதிர்காலத்தில் இந்தச் சபைக்கும் அவர் தனது ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன்.
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்க ளைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர், என்றார் ஆளுநர்.
இதேவேளை, உள்ளூர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் வேலணை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதியையும் ஆளுநர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
















